Thursday, February 15, 2018

நீங்கா அந்த நினைவலைகள்

வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியா வயது ஆசை. உடலுக்குள் நிகழ்ந்த மாற்றம் சிந்தையிலும் சிதைக்கும் தருணம். அன்று வரை எந்த வித்தியாசமும் கண்ணில் படாமல் இருந்து, அன்றையில் இருந்து எல்லாமே வித்தியாசமாய் தெரிந்ததின் மர்மம். அது வரையில் பார்க்கும் அனைவரும் அன்பாய் புன்னகைத்தது போய், பார்வையும் பின் கண்களும் தவிர்க்கும் விதம் கவனிக்க துவங்கியதும். மறுபடியும் கேட்கும் பார்க்கும் பாடல்கள் இன்னும் ஒரு விதமாக அன்றையில் இருந்து தோன்றியதும். எவ்வளவு எல்லாம் சரளமாக பேசிய சொற்கள் அன்றைய தினத்தில் இருந்து காணாமல் தடுமாறுவதும். தொண்டை விக்கி நிற்பதும். நா எழாமல் தொண்டைக்குள் மாயமாய் மறைவதையும். நண்பர்கள் பேசிய மறைபொருட்கள் அன்றையில் இருந்து தனக்கும் புரிய தொடங்கிய நாள் அல்லவா.........

அது அந்த கண்களா இல்லை அந்த பார்வையா என்று இனம் அறியா தருணம், இன்றைக்கும் புரியா விளக்கங்கள் அவை. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே பாட்லின் மறைபொருளும் அன்றைக்கு தான் விளங்கலாயின. திரையில்  U/A என்று சொல்வது ஏன் என்று விளக்கிய நாட்கள். உடன் பிறந்தோர் பெற்றோர் என்று எவரிடமும் கேட்கமுடியா கேள்விகளை நண்பர்களிடமும் கேட்கமுடியா கேள்விகளாய் யாரும் அது பற்றி பேச மாட்டார்களா என்று ஏங்கிய நாட்கள். குமுதம் விகடன் என்று வீட்டில் கிடக்கும் பழைய இதழ்களின் ஆதிக்கதை எல்லாம் துழாவி படித்த நாட்கள். திரைதுறை ஆண்டுக்கு பல கோடி ஆராய்ச்சியின் முடிவை வானொலியின் மூலம் மக்களை காலை 30 நிமிடம், மாலை 60 நிமிடம் இரவு 30 நிமிடம் என்று சென்னை திருச்சி திருநல்வேலி முதல் சிலோன் வரை மாற்றி மாற்றி தேடி அலையவிட்ட காலம். வானொலி நிலையங்கள் மாறினாலும் அனைத்திலும் அதே பாட்டுகளும் அதனுள் தேடல்களும்.

எப்போது விடியும் என்று இருக்கும், விடிந்ததும் ஏன் விடிந்தது என்று இருக்கும். மறுபடியும் முதலில் இருந்தா என்று மலைப்பாக இருந்தாலும் மறுபடியும் அதே பூச்சும் உடைகளை படிய படிய தேய்த்தும் கேசத்தை படிய படிய கோர்த்தும் என்று புதிதாக தொற்றிக்கொண்ட வியாதி துவங்கிய நாட்கள். இரவு மட்டுமே படம் பார்த்த காலங்கள் போய் அந்த நாளில் இருந்து காலைக்காட்சிகளுக்கு கூட சென்ற தினங்களாய் மனம் தேடிய நாட்கள். முன் வரிசையில் அடுத்து வரும் வசனங்களை உரக்க உச்சரிக்கும் போது எழும் கோபத்தை விட அந்த கேள்விகளுக்கும் அவள் சொல்ல போகும் பதிலை மனதிலே மௌனமாக உச்சரித்த நாட்கள்.

அந்த மாய உலகத்தின் காவலர்களாய் வாரம் தோறும் சியாம் வரையும் அட்டைப்படம் என்னவாக இருக்கும். அவரின் எல்லா படங்களிலும் ஒரே முகம் தான் வரைவார் அனால் அவைகளை பார்க்கும் போது ஒவ்வொரு விதமாய் தொன்றிய நாட்கள். நிஜ உலகின் நிழல் கூட தெரியாத அப்பாவின் பணம், பசிக்கும் முன்னே உணவை கொண்டு வந்து கொடுத்த அம்மா என்று எதையுமே கணக்கிட தெரியாத வயது. கவனம் எல்லாம் அந்த சைகிளின் மேலும் அந்த வயர் பிரேக்கின் மேலுமே. அது வரையின் தூசியும் துப்புமாக இருந்த சைக்கிளில் அன்றைக்கு முதல் வாரம் ஒரு கழுவலும் தனது பெயரை அந்த செயின் கார்டில் ஆங்கிலத்தில் எழுதி பக்கத்தில் ஒரு ரோசாவை வரைய சொன்ன போது அந்த ஓவியர் விட்ட பார்வையும்.

அந்த நாள் முதல் மதம் என்னை கட்டுப்படுத்தாமல் அனைத்து மத கோவில்களிலும் பார்த்து வேண்டியதும் நீங்கா அந்த நினைவலைகள். கடந்து வந்த பாதை நெடியது என்றாலும் இன்றைக்கும் அந்த சாலிடர் டிவியில் காதலின் தீபம் ஒன்று என்று இளமை துள்ள பாடல் ஒலித்த அந்த தருணத்தின் உறைந்த தருணங்களாய் என்றைக்கும் மனதில் உறைந்து இருந்து அவ்வப்போது துளிர்விடும் இனிய நினைவுகளாய்.................இன்றும்...............

0 comments: