Sunday, February 3, 2008

மத்திய இல்லினாய் தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழா.

காலையில் நிரலில் குறிப்பிட்டிருந்த நேரத்தில் பொங்கல் விழா இனிதே துவங்கியது. விழாவை பொறுப்பேற்று நடத்திய சுப்பு அவர்களின் வரவேற்புரையில் துவங்கியவிழா, மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தால் நடத்தப்படும் தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் தொடர்ந்தது. இனிமையும் அதைவிட அதிகமாக மழலைமொழியாகவும் அமைந்த அந்த இசை, வளர்ந்த மாணவர்களின் வழிகாட்டுதலில் இனிமையாக பயனித்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது.


அடுத்ததாக பரதம் பயிலும் சிறுவர் சிறுமியர்கள், தாங்கள் இது வரை பயின்ற கலையினை அழகாக நடனமாடி மகிழ்வித்தார்கள். பரதத்திற்கு என்ற ஆடையுடன் கை, கால், முகம் என்று அத்தனை வித விதமாக அவர்கள் காட்டிய அந்த பரத முறைகள் அவர்களது தேற்சியை காட்டியது.





ஆடல் கலையே தேவன் தந்தது பாட்டிற்கு நாட்டிய நடனமாடிய இல்லினாய் பல்கலைகழக மாணவி, பாடலில் வந்த அத்தனை செய்திகளையும் நடனமுறையில் வெளிகொண்டு வந்து காட்டியது அருமையாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்த வருடம் தான் பயிற்சியினை துவங்கி இருக்கும் இளம் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.


இரண்டு ஆண்டுகளாக பொறுப்புவகித்து வந்த செயற்குழு, தனது பதவிகாலம் முடிவடைந்தால் பதவி விலகுவதாக தெரிவித்ததை கருத்தில் கொண்டு. இனி வரவிருக்கும் நாட்களில் சங்க நடவடிக்கைகளை நடத்திசெல்ல புதியதொரு செயற் குழுவினை தேர்ந்தெடுக்கும் அறிவிப்பினை பதவியை விட்டுச்செல்லும் செயற்குழுவும், பொறுப்பு வகிக்கும் தற்காலிய செயற்குழுவும் அறித்தது. மின்னஞ்சலோ, அல்லது சங்கத்தின் வலை தளத்திலோ சங்க உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தையும் ஆதரவுகளையும் தெரியபடுத்துமாறு அறிக்கப்பட்டது.



இதுவரை செவிக்கும், விழிகளுக்கும் விருந்துதளித்த விழா, வயிற்றுக்கும் விருந்தளிக்கும் பொருட்டு உணவு இடைவேளை அறிவித்தது. வித விதமான உணவுகள், சூடாக மணம் பரப்பிய வண்ணம் அனைவரது பசியையும் பலமடங்கு கூட்டிக்கொண்டே சென்றது உணவு வயிற்றுக்குள் சென்றடையும் வரை. உணவோடு காதுக்கு இனிமையாக திரையிசையை தேனமுதாக ஒரு புரம் வழங்க, விழாவுக்கு வந்தோரை நலம் விசாரிப்பில் துவங்கி என்ன என்ன உணவு வகைகள் இனிதாக மிக இனிதாக இருக்கிறது என்று தெரிவு தெரிவிக்கும் வகையில் பேச்சுக்களுடன் இனிதே முடித்தது உணவு இடைவேளை.



தொடர்ந்து இல்லினாய் பல்கலைகழக மாணவர்களது இசை குழு ஒரு மெல்லிசை விருந்தளித்தது. இது வரையில் நடந்தது போல் இல்லாமல், வயலின், கித்தார், தபேலா, கீ போர்டு என்று வந்த இசைக்குழு சிறப்பாக பாடல்களை இசைத்து இன்னிசை விருந்தினை வழங்கியது. ஒரு தொழில் முறை இசைக்குழு இசைத்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைத்தது இவர்களது இசை விருந்து. வாசிப்புகளிலும், இசை ஒருங்கிணைப்பும் அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தது.



குழந்தைகள் செய்வது எல்லாமே அழகுதான். அதுவும் கள்ளமில்லா அந்த நட்சத்திரங்கள் சிரிக்கும் அழகே அழகு. சிரிப்பென்ன அவர்களது ஆட்டத்தையே பாருங்கள் என்று ஒரு ஆறு நட்சத்திரங்களை மேடையேற்றி வளைய வர வைத்தார்கள் பெற்றோர்கள். பக்கத்தில் ஆடுபரையும், அப்படியும் தெரியவில்லை என்றால், சொல்லி கொடுத்தவர்களையும் நோக்கி சரிசெய்து கொண்டு ஆடிய அழகு இருக்கிறதே அதை பார்த்தால் தான் தெரியும் அதன் அழகும் அருமையும். அருமை அருமையிலும் அருமையாக அமைந்தது அந்த நிகழ்ச்சி.
குழந்தைகளின் நடனத்தை இந்த தொடுப்பில் பார்க்கவும்

பொங்கல் விழாவில் பொங்கல் சம்பத்தமாக இருக்கவேண்டும் என்று மகளீர் மன்றம் சார்பாக கும்மி ஆட்டம் ஒன்றை வழங்கினார்கள் மகளீர் மன்ற உறுப்பினர்கள். நடுவில் வைத்த பூங்கலசத்தை சுற்றி வந்து தந்தத நாதினம் தன்னானே பாட்டுக்கு கும்மியிட்டது எந்த நாடு ஆனாலும் சரி எங்களது பாரம்பரியத்து இசையும் பழக்கமும் வேறு எந்த நாட்டினது பாரம்பரியத்துக்கும் சளைத்தது அல்ல என்று உரைத்து சென்றது. இந்த ஆண்டு துவங்க பெற்ற மகளீர் மன்றம் தான் என்றாலும், ஆரம்பம் முதல் அசத்தும் அவர்களது மன்றம் வாழ்க, உங்களது பணி தொடரட்டும், சிறக்கட்டும்.


மௌன மொழி விளையாட்டு, இதில் அனேகமாக அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். வார்த்தைகளை ஊகிக்கும் விளையாட்டை விறு விறுப்பாக்கும் விதமாக விடை பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு மேடையில் பரிதவிக்கும் அவர்களை பார்க்கும் போதும். இதை கூட உங்களால் சொல்ல முடியவில்லையா என்று கீழே இருந்து கேட்க்கும் கேள்விகள் என்று நல்ல கேளிக்கையாக அமைத்தது.



பிறகு தொடர்ந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் இந்த முறை போட்டி பலமாக இருந்தது. ஒரு புரம் பழைய பாடல்களாக அசத்த, மற்றொரு புரமோ புதியபாடலாக அசத்த. பெண்களின் அணிகளுக்கு இடையில் ஒரே ஆண்கள் அணி என்று மாட்டிய அவர்கள் திணறிய அவர்களை கீழே இருந்த மக்கள் துப்பு கொடுத்து உதவியது நல்ல கேளிக்கையாக அமைத்தது.

வரவிருக்கும் சித்திரை திருவிழாவினை அறிவித்து நன்றி உரையுடன் விழா இனிதே முடிந்தது. அடாது பனி பெய்தாலும் விடாது விழா நடத்துவோம் என்று அறிவித்தது போல் இந்த விழா மிகவும் சிறப்பாகவும், நிறைவாகவும் நடத்தி கொடுத்த மத்திய இல்லினாய் தமிழ் மக்களுக்கு தமிழ்ச்சங்கதின் சார்பில் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கிறோம்.
பனிமலருக்காக மத்திய இல்லினாய் தமிழ்ச்சங்கம்.

Saturday, February 2, 2008

வழி தெரியாமல் தடுமாறும் கப்பல்: செயலலிதா

பொதுவாக செயலலிதாவின் நடவடிக்கைகளிலோ, அரசியல் அறிக்கைகளிலோ, அல்லது அரசியல் மற்றும் தனிபட்ட நடத்தைகளை கவனித்தோமானால் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான். அப்படியே ஏதோனும் நடவடிக்கை அல்லது அறிக்கையோ வந்தாலும், அது பொதுவாக அடுத்தவர் மேல் ஏவும் தனிப்பட்ட தாக்குதலாகத்தான் இருந்திருக்கிறது இன்றும் அப்படி தான் தொடர்ந்தும் கொண்டு இருக்கின்றது. இதை அம்மையாரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை கேட்டால் மறுக்காமல் ஆமாம் என்று தலையாட்டுவதை பொதுவாக காணமுடியும்.

பொய்யும் புனை சுருட்டுகளை அள்ளிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே. சென்றமுறை ஆட்சிக்கு வந்த உடனே பெட்டகத்தில் பொருளே இல்லை என்றும் அதனால் எந்த ஒரு திட்டத்தையும் திட்டமிடவோ அல்லது செயல்படுத்தவோ முடியாதது மட்டும் இல்லாமல், அரசு இயந்திரத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்ககூட பணம் இல்லை என்று சொன்னதோடு மட்டும் நிற்காமல். பணிவிடைபெறும் மக்களின் பணத்தையும் கொடுக்கமுடியாது என்று சொன்னவர்கள், பின்னாளில் வந்த எதிர்ப்புக்கு அஞ்சி தவணையாக கொடுப்பதாக செயற்படுத்தினார்கள்.

பணிவிடைபெறும் மனிதன் 58 ஆண்டுகால உழைப்பிற்கு பிறகு அவரது பணிக்காலம் முழுவதும் குருவியாக சேர்த்துவைத்த பொருளை அவரே எடுக்க முடியாது என்று சொன்னால் அந்த வயதான மனிதன் எங்கே போவான். அதுவும் இந்த நாள் முதல் அடுத்த முதல் தேதிகளில் இனிமேல் சம்பளம் என்று ஒன்று வராது என்று ஆன பிறகு இப்படி ஒரு இடியை அவரது தலையில் இறக்கினால் அந்த வயதான காலத்தில் அவரது மனதும் அவரது குடும்பத்தினரது மனதும் எப்படி இருக்கும். அடுத்த மாத உணவுக்கு என்ன செய்வோம் என்று வருந்திய மனங்கள் என்ன பாடு பட்டு இருக்கும்.

இவைகளுக்கு அம்மையார் சொன்ன ஒரே காரணம் பெட்டகத்தில் பொருள் இல்லை!!!!. எனக்கு தெரிந்தவரையில் இந்தியாவில் எந்த ஒரு காலத்திலும் நடக்காத ஒரு செயல் இது. எப்பேர் பட்ட நிலைவந்தாலும் பணிகொடை பணத்தில் கையை வைக்கூடாது. அப்படியே ஒருவர் எடுக்க நினைத்தாலும், தன்னுடைய பணத்திற்கு தானே வட்டி கொடுத்தான் எடுக்கவேண்டும் என்ற விதிகளையும் விதித்து, அந்த வட்டியையும் வாங்கி அவருகே கொடுத்துவந்த அமைப்பில், பணமே இல்லை என்று சொல்ல இவருக்கு என்ன தைரியம் இருந்திருக்கவேண்டும்.

இது போல் எத்தனையோ உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். அதைவிட சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அவர் முதல்வராக இருந்த 2 முறையும் அரசு இயங்காத அரசாகத்தான் இருந்தது. அப்படி இயங்கும் போதெல்லாம், அவரின் தனிபட்ட பழிவாங்கலுக்கும். அவரது உறவுகளும், ஒட்டு குழுவும் கொள்ளை அடிப்பதற்கு என்று தான் இயங்கியது. இல்லை என்று ஆதாரங்களோடு மறுக்க யாரால் முடியும். இப்படி செயல்படவே முடியாமலும் தெரியாமலும் அவதிபட்டதை பார்த்தமக்கள் அவரை சென்றமுறை பேசாமல் சென்று ஓய்வெடுங்கள் என்று வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அப்போது ஓடி ஒளிந்துகொண்டவர் தான், ஐதராபத்திலும், கொடையிலும், சிறுதாவூர் என்றும் இடம் மாறி மாறி ஓய்வெடுத்து வெறுத்து போனவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று அழையா விருந்தாளியாக பதவியேற்பு நிகழ்சிகளுக்கு போவது. போன கையோடு, நீங்கள் கூப்பிடாமல் நானே வந்தேனே அது போல் இல்லை என்றாலும் நான் கூப்பிடதாகவாது எங்கள் வீட்டுக்கு வந்து போங்கள் என்று சொல்லி மோடியின் தயவிலாவது தனக்கு விளம்பரம் கிடைக்கிறதா என்று தேடும் வேலை தான் இப்போது அம்மையாருக்கு. அப்படியும் விளம்பரம் கிடைக்கவில்லை என்றால். மோடி எங்களது வீட்டில் விருந்துக்காக அழைத்தபோது வந்தவர் என்னிடம் தவறாக நடக்கமுயற்சித்தார் என்றும் சொல்லுவார். அவர் எதிர்பார்த்த விளம்பரம் கிடைக்கவில்லை, தேர்தல் கூட்டணிகள் பாதகமாக அமைந்தால் அம்மையாரின் கண்ணிரையும் கம்பலையும் பார்க்கதானே போகிறோம். பாவம் மோடி, தலை உருளாமல் இருந்தால் சரிதான்.

இப்படி விளம்பரம் தேடவேண்டிய அவசியத்தில் இருக்கும் அவர்தான், ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு வந்தவர் பேராசிரியரை வம்புக்கு இழுத்திருக்கிறார். ஒரு மனிதன் ஆசானாக ஒரு நாள் பணியாற்றினாலும் சரி, 1, 2 வகுப்பு ஆசானாக இருந்தாலும் சரி. மாணவனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் வந்த பின்னும் கூட, எங்கேனும் ஆசானை பார்த்தால் அன்றைக்கு வகுப்பறையில் காட்டிய பணிவோடு ஐயா என்று கேட்க்கும் அதே பணிவோடு பேசுவது தான் வழமை. இது ஆசானுக்கு மனிதகுலம் வழங்கும் மரியாதை, அங்கிகாரம், பெருமை.

இதில் அம்மையாருக்கு என்ன உருத்தலோ தெரியவில்லை. முன்னாள், இன்னாள், உதவி பேராசிரியர் என்று என்ன என்னவெல்லாம் சொல்லி கேவலமாக பேசவேண்டுமோ அவை எல்லாம் பேசி சட்டசபையிலே குழப்பங்களை விளைவித்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியும் அதன் ஆசான்களும் தமிழுக்கும், தமிழர்களது உணர்வுகளுக்கும் என்ன என்ன செய்திருக்கிறார்கள் என்று மறுபடியும் ஒரு விளக்கம் சொல்லிதான் மக்களுக்கும் புரிய வைக்கவேண்டும் என்று இல்லை. சுருக்கமாக பச்சையப்பன் கல்லூரி படிக்கட்டு கூட பைந்தமிழ் பாடும் என்று சொல்லுவார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் காலம் தொட்டு அரசியலில் இருக்கும் அவர், இதுவரையில் ஆட்சியில் இருக்கும் காலம் வரையில் கல்வி அமைச்சராக இருந்து நிறைவாக பணியாற்றியவர். இந்த வயதிலும் ஓய்வு வேண்டும் என்று உடல் கெஞ்சும் காலத்திலும் அரசு பணிகளை ஏற்று பணியாற்றுவதை பார்த்தால், நின்றால் வலிக்குது, உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவிலை. மாடிப்படி ஏறமுடியவில்லை என்ற நிலைமையில் உள்ள்வர்களுக்கு கொஞ்சம் பொறாமை வருவது இயற்கைதான். அதற்காக இப்படியா ஒருவர் பேசுவது வகை தொகை இல்லாமல், வயது வித்தியாசம் கூட பார்க்காமல்.

2 முறை முதல்வராக இருந்தபோதும், முன்னாள் அரசு வைத்திருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது, வரவு செலவு திட்டங்களை ஈ அடித்தான் பிரதி எடுப்பது. இவைகளை பற்றி எல்லாம் எங்கே விவாதத்தில் சொல்லிவிடுவார்களோ என்று, ஆளுனரை ஆங்கிலத்தில் படிக்கவைத்து திசைதிருப்புவது என்று இருந்த அம்மையார் சொல்கிறார் இப்படி. இது எப்படி தெரியுமா இருக்கிறது, தெருவில் செல்லும் ஒருவரை கைகாட்டி அவருக்கு முற்றிலும் அறிமுகம் இல்லதவரிடம் அங்கே போகிறாரே அவர் கெட்டவர் என்று சொல்லுவார்களே அதை போல. இவரும் ஏன் என்று கேட்க்க மாட்டார், ஏன் என்றால் இவருக்கு அவரை தெரியாது, அதனால் அவசியம் இல்லை. ஆனால் பின்னாளில் வேறு எங்காவது பார்க்க நேர்ந்தால் அங்கே இவருக்கு தெரிந்தவரிடம் சொல்வார் அதே வசனங்களை இவருடைய நண்பர் சொன்னார் என்றும் அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்றும்.

பிறகு, ஈரை பேனாக்கி, பேனை பேயாக்கி அல்லவா செய்தி பரவும். அப்படி ஆகட்டும் என்று ஆதாரமே இல்லாமல், நடுவணரசுக்காக உரிமைகளை விட்டு கொடுக்கிறது என்றும். தமிழகம் வன்முறை பூமியாக மாறிவிட்டது என்றும். ஆட்சி நடத்தும் உரிமையை அரசு இழந்துவிட்டது என்றும், உடனே அரசை கலைக்கவேண்டும் என்று வயிற்று வலியில் இஞ்சி மறப்பா விற்பவனைபோல் கூவிவிட்டு சென்றுள்ளார். ஒரு வேளை மோடி தமிழகம் வந்து சென்றதை தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் தமிழகத்தில் நடைபெறுகின்றது என்று சொல்கிறாரோ என்னவோ.

வழி தெரியாமல் தடுமாறும் கப்பல் என்று தன்னையும் தன்னை சுற்றி திரியும் கூட்டத்தை தான் சுயவிமர்சணம் செய்துள்ளார் போலும் இலைமறை காய் போல். தன்னால் தான் எல்லாம் என்று சொல்லித்திரிந்த காலம் போய் இப்போது மோடியை காட்டிதான் விளம்பரம் பெறவேண்டும் என்ற நிலைக்கு அவர் வந்திருப்பதை பார்த்தல் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.