Tuesday, July 14, 2015

பாகுபலி - திரைவிமர்சனம்

உலக திரைபடங்களை எல்லாம் பார்க்கும் போது இது போல் நம் நாட்டு படங்களும் வருமா என்ற ஏக்கம் எப்பவும் வரும். அந்த ஏக்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் ஒரு பிரமாண்ட படம்.

முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரையில் அந்த பிரமாண்டம் நீண்டுக்கொண்டு வந்து இருப்பது அதிசயமே.

பொதுவாக காட்சி விரிவாக்கத்தில் மாட்டும் அவைகளை காட்டிவிட்டு பிறகு கதைக்குள் புகுந்ததும் அவைகள் நம்மை அறியாமலே மறைக்கப்பட்டு விடுவது திரைகதையில் ஒரு உத்தி.

அந்த இலக்கணங்களை எல்லாம் மீறி விளம்பரபடுத்தியது போல் பிரமாண்டத்தையும் ஒரு பாத்திரமாகவே ஆக்கி படத்தை கொடுத்ததிற்கு பாராட்டுக்கள்.

முதல் இரண்டு காட்சிகளுக்கு பிறகு நாயகன் மலையேற்றம் முதல் இடைவேளை வரை விருவிருப்பு. என்ன அந்த காதல் காட்சிகளை இவ்வளவு மிகையாக்காமல் கட்டுப்பாட்டோடு கொடுத்து இருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை...

ஜேம்சு பாண்டு கணக்காக நாயகனுக்கு எல்லாம் அத்துபடி, நீருக்குள் அவ்வளவு நேரம் மூச்சுபிடிப்பதில் இருந்து மரத்தில் இருந்து மாயமாக போவது வரை.....

அரண்மனை காட்சிகளில் ஆட்கள் எல்லாம் எறும்பு போல் காட்டும் அளவுக்கு மிக பெரிய அரண்கள் ஏன் என்று தான் புரியவில்லை.

100, 200 மக்கள் சேர்ந்து இழுக்கும் கயிரை ஒரே ஆளாக இழுத்து பிடித்து நிறுத்துவது, பெரிய பாறைகளையும் மரங்களையும் கையிலே உடைப்பதும், தன்னைவிட 10 மடங்கு எடைகொண்ட எருதை கையில் பிடித்து நிறுத்துவது போன்ற அதிதீர காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

இவ்வளவு பிரமாண்டத்தில் யானைகளும் குதிரைகளும் அதிகம் இடம் பெறாமல் போனது ஏமாற்றமே. வெகுச்சில இடங்களில் மட்டும் இவைகள் அலங்காரமாக வந்து போவது மட்டும் நெருடலாக இருக்கிறது.

முதல் காட்சியில் காட்டும் அந்த பிரமாண்ட அருவியின் நீர் எல்லாம் முகச்சொற்பனான நீர் ஓடையாக செல்வது போல் இருக்கிறது என்று உடன் உழைத்த மக்கள் யாரும் சொல்லவில்லை போலும்.

பனி பிரதேசமாக காட்டும் இடங்களில் பனிக்கான எந்த துணிமணிகளும் இல்லாமல் எல்லோரும் அப்படியே வந்து போவது இயல்பாக இல்லை....

போர்கள காட்சிகளில் இது வரை காட்டிய அம்பும் ஈட்டியும் தவிர அவைகளையும் தாண்டி காட்சி இருப்பது நல்ல சிந்தனை. இதை பார்த்துவிட்டு பீரங்கியின் கண்டுபிடிப்பு இந்தியாவில் தான் துவங்கியது என்று அரசியல் மேடைகளில் பேசமால் இருந்தால் சரிதான்.

இரம்யாவிற்குள் இத்தனை திறமையா அப்பா என்ன ஒரு கம்பீரம்...

 நிலைகெட்ட மனிதரின் நாக்கு தான் கூரிய ஆயுதம் கணக்காக நாசரின் பாத்திரம், காரணம் வலுவாக இல்லை என்றாலும் அப்படி தான் இருக்கும் மனிதமன பலவீணம் என்று காட்டி இருக்கிறார்.

இவ்வளவு குறைகளுக்கும் நடுவில் கதை முடிவுக்கு வருவது கூட தெரியவில்லை அப்படி ஒரு ஓட்டம் திரைகதையில். அடுத்த பகுதியில் இந்த குறைகள் எல்லாம் இல்லாமல் கொண்டுவருவார்கள் என்று நம்புவோமாக. வாழ்த்துகள் பாகுபலி குழுவிற்கு.....

0 comments: