Thursday, July 12, 2012

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......

எல்லோரையும் போல தான் நானும் எனது வாழ்வை துவங்கினேன். அவனும் அப்படி தான். பிறகு ஏன் இந்த பிளவு.

சரி இன்றைகு சரியாகும் நாளைக்கு சரியாகும் என்று நாட்கள் தான் தொலைந்தது. நாட்களோடு சேர்ந்து எனது இளமையும், வாழ்க்கையும் தொலைந்தது.

அப்படி என்ன தான் செய்தேன் இன்று வரை யோசித்த்து தான் பார்கிறேன் ஒன்றும் தெரிய இல்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது கடமைகளை எல்லாம் செய்தேனே. கடமையே என்று இருந்தற்கு காலம் என்னை கேலி பேசுவது சரியா....

எத்தனை எத்தனை செயல்களை எல்லாம் யோசித்து யோசித்து சரி செய்தாகிவிட்டது. இன்னமும் மீதம் என்ன இருக்கிறது எனது உயிரை தவிர விடுவதற்கு, இருந்தும் எந்த பதிலும் இல்லையே.....

எனக்கு போல் அவனுக்கும் மனது என்று ஒன்று இருக்கும் தானே அதற்கு இது எல்லாம் கிடையதோ அல்லது ஆண்களுக்கு மனது என்ற ஒன்றே கிடையாதோ.....

ஒரு வேளை பேசி சண்டையாவது போட்டிருக்கலாம், இல்லை கோபம் தீரும் வரை என்னை அடித்தாது தீர்த்து இருக்கலாம் இப்படி எதுவுமே இல்லாமல்.........

ஒரு வேளை நான் அதற்கு கூட தகுதி இல்லாதவளோ.......

இலவு காத்த கிள்ளை போல இத்தனை காலம் காத்து கிடந்தது எல்லாம் வீண் தானே.....

வேலை பார்த்து சம்பாத்தித்து கொடுத்து இருந்திருந்தால் திருப்தி பட்டிருப்பானோ. இல்லை நடிகைகளை போல் வேடம்மிட்டு தினமும் நடித்திருந்தால் ஒரு வேளை பிடித்திருந்திருக்குமோ.....இல்லை நானே தொலைந்து விடுகிறேன் என்று ஓடி ஒழிந்து இருந்திருந்தால் மனதளவிலாவது வருந்தி இருப்பானோ.......

எல்லாம் தான் இருந்தது வீட்டில், ஆனால் மனதில் தான் எதுவுமே இல்லை. ஒரு வேளை வீட்டில் உள்ளவைகள் தான் எனக்கு மகிழ்ச்சி என்று நினைத்தானோ, இல்லை அப்படி தான் அவன் மனதில் படும்படி நடந்துக்கொண்டேனோ......கேட்டத்துக்கு எல்லாம் பணம், என்ன கேட்டாலும் மறுப்பே இல்லாமல் கிடைக்கும்......ஆனாலும்......

இவ்வளவு இருந்தும் அவனது முகம் பார்க்க தினமும் நான்படும் தவிப்பு அவனுக்கு புரியாமலேயே போனது ஏனோ....இல்லை எனக்கு தான் எனது தவிப்பை வெளிக்காட்ட தெரியவில்லையோ...... நாடகங்களில்... ஏன் கண்ணால் காணாத கதைகளின் நாயகிகளின் தவிப்பை எல்லாம் தவறாமல் படித்து புரிந்துக்கொள்ளும் இவனுக்கு உயிருள்ள எனது தவிப்பு புரியாமல் போனது ஏனோ......

நித்தமும் இணையம், மீதி நேரங்களில் தொலைக்காட்சி, அடுத்து அடுத்து வரும் படம் என்னை தினமும் வரிசையில் கடைசியில் நிப்பாட்டி எனது நேரம் வரும் போது மட்டும் கடையடைப்பது எப்படி தினமும் வாடிக்கையானது அவனுக்கு.............

குழந்தைகள் அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மதிப்பது இல்லை, கண்டிக்க நேர்ந்தால் தனது புன்னகையால் நம்மை கொள்ளை கொள்ளும். என்னை தினமும் அப்படி தான் இவனும் கொள்ளை கொள்வான்...... அந்த குழந்தை சிரிப்பும், குறும்பு பார்வைக்கும் என்றைக்கும் குறைச்சல் இல்லை........

நானும் தான் சிரித்து பார்க்கிறேன் குழந்தையை போல நிமிடத்திற்கு நூறுவரை அவனை கவராமல் போகும் எனது புன்னகையை நானே வெறுக்கிறேன்......அதே புன்னகை போல் தான் எனது புன்னகையும் கண்ணாடியில் எனக்கு தெரிகின்றது ஆனாலும் அவனால் இரசிக்க முடியாமல் போனால் கூட பரவாயில்லை, கவனிக்க கூட முடியாமல் போனது ஏனோ.......

பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று தான் சொன்னார்கள், ஆனால் இவனோ எவ்வளவு முன் நான் எழுந்தாலும் வெளியில் வரும் வேளையில் தலையை துவட்டிக்கொண்டு இருக்க எங்கே பழகிக்கொண்டானோ. ஒரு வேளை எனது மனதில் தோன்றுவது எல்லாம் இவனுக்கு தெரிகின்றதோ.........

ஒரு ஆணாய் என்னை எல்லாவிதத்தில் ஆண்டானே என்னால் அவனை பெண்ணாக ஆள முடியாமல் போனது ஏனோ. இல்லை ஆண்டு தான் இருந்தேனோ எனக்கு தெரியவில்லை.....

இடியே இறங்கினாலும் அசையாத ஒரு புன்னகை எப்பொழுதும் புதிதாய் மலர்ந்த ரோசாவை போல். ஒரு இம்மியே ஆனாலும் எனது முகம் மட்டும் அவன் எப்பொழுதும் சொல்வது போல் அத்தனை கோலம் கோனுவது ஏனோ......எல்லா பெண்களும் அப்படி தானே இருக்கிறார்கள் மற்றவர்களை மட்டும் எப்படி இரசிக்கிறான்......

 நான் கேட்காமலே எல்லாமும் கொடுப்பான். நானோ கொடுக்க காத்துக்கொண்டு இருந்தும் எதுவுமே கேட்காமல் என்னை அவமானம் படுத்தியது ஏனோ கடைசிவரையில்..........................

அவனை ஆசை தீர பழிவாங்க வேண்டும், ஆனால் எப்படி வாங்குவது........... கண்கலங்க விட்டது இல்லை என்னை. அழுத முகத்தை பார்த்ததும் ஆயிரம் விசாரிப்புகளில் மூழ்கிபோய் எதற்கு அழுதோம் என்றே மறந்து போகும்.......வசீகர விசாரிப்பு அவனுக்கும் மட்டும் எப்படி சாத்தியமோ.......

எனக்கு என்ன வாங்கி தரவேண்டும் என்று நினைக்கும் நாளிலே மாலையில் கையில் அவன் அதை பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் போது வரும் வெறுப்பை எங்கே கொண்டு கொட்டுவது. வாங்கித் தந்தானே என்றதை விட கேட்க விடாமல் போனானே என்ற எரிச்சல் தான் மிஞ்சும் ஒவ்வொரு முறையும்.....

எதை கேட்டாலும் சலிக்காமல் பேசுவான், திறந்த மனதுடன் விவாதிப்பான், ஆச்சரியப்படும் கருத்துகளை எனது சிந்தைக்குள் சொலுத்துவான்......... இன்னமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலையில் ஒலிக்கும் அலை பேசி ஒரு பெரிய சங்கு ஊதும்.......தொலை பேசி கண்டுபிடித்தவனை கொல்ல வேண்டும் என்று இருக்கும்................

எவ்வளவு தாமதமாக தூங்கினாலும் அடுத்த நாள் அதே சுறுசுறுப்பு எங்கே இருந்து தான் அவனுக்கு மட்டும் வருகிறதோ........ ஒரு அரை மணி நேரம் தூக்கம் கெட்டாலும் அடுத்த நாள் முழுவதும் வரும் கொட்டாவியை அடக்க என்னால் மட்டும் ஏன் முடியவில்லை......

காலை மாலை இரவு என்று எப்போது நேரம் கிடைக்கிறதோ அந்த வேளையில் குழந்தையை போல் படுத்தது தூங்க அவனால் மட்டும் எப்படி முடிகின்றது. மந்திரவாதியோ, இல்லை அந்த அளவிற்கு கொடுத்து வைத்தவனோ......  

ஊருக்கு என்று ஒன்று வந்தால் இரவு பகல் பார்க்காமல் எப்படி இவனால் மட்டும் அலைய முடிகிறது இந்தனை வருடமாக. எப்போது தான் போதும் எனறு சலிப்பு வரும் என்று தவம் கிடந்து தோற்றுத்தான் போனேன்.........

துணிமணிகளாகட்டும், முகச்சவரம் ஆகட்டும் அவ்வளவு நெளிவாக எல்லாம் இல்லை ஏனோ தானோ என்று தான் இருப்பான், இருந்தாலும் திரும்பி பார்க்கும் போது அந்த ஒரு சின்ன புன்னகையால் அவ்வளவையும் மறைக்க எங்கே தான் கற்றுக்கொண்டானோ.......

ஆயிரம் ஆயிரம் விதங்களில் நான் சமைத்தாலும் ஊருக்கே அவன் சமைக்கும் பிரியாணி என்றால் உயிர், எத்தனை முறை முயன்றாலும் ஒரு நாள் கூட கைகூடாத இரகசியம் என்ன? பாத்திரம் கழுவும் நிலையில் ஒருந்து பிரியாணி இறக்கும் வரையில் கூடவே இருந்து பார்த்தாகிவிட்டது எண்ணில் அடங்கா முறை. இருந்தாலும் அந்த பதம் இன்னமும் எனக்கு கற்பனையே.........யாரை நோக........

எங்கே சென்றாலும் தெரிந்தவர்கள் அவனை மட்டும் அப்படி ஒரு விசாரிப்பு விசாரிப்பது ஏன்..... நானும் கூடவே தான் இருக்கிறேன், ஒரு பெண்ணாக  வேண்டாம் ஒரு பொருளாகவாது என்னை மதிக்கலாம் அல்லவா.........அதற்கு கூடவா தகுதி இல்லாமல் போய்விட்டேன்....... பிடித்து காட்டு கத்து கத்தவேண்டும் என்று இருக்கும்........மனதுக்குள் கத்துவதோடு சரி...........

இப்படியே எத்தனை காலம் தான் போவது, என்னால் இருக்க முடியவில்லை நான் போகிறேன் என்று சொன்னதும், போ என்று சிரித்துக்கொண்டே சொல்லி என்னை கடைசியாகவும் தேற்கடித்தானே என்னத்தை சொல்ல. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாமல் நகர்ந்தவளை அப்படியே வழி அனுப்பி மீண்டும் அந்த புன்னகையுடன் மறைந்தானே.........ஒரு வேளை அவனுக்கு என்னை பிடிக்கவே இல்லை போலும்...........அது தான் போ என்று விட்டு விட்டானோ.........

2 comments:

Anonymous said...

மனதினில் ஈர்ப்பு இருந்தால் தானே பிடிக்கும்! பகிர்வு அருமை! நன்றி!
அட்சயா!
http://krishnalaya-atchaya.blogspot.com
http://vallimalaigurunadha.blogspot.com

')) said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...........